Home ஜோதிடம் தோஷங்கள் பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷம் நீக்கும் பரிகாரம்

பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷம் நீக்கும் பரிகாரம்

பித்ரு தோஷம்

தோஷங்களில் மிக கடுமையான தோஷம் பித்ரு தோஷம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆகிய இடங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரியன், மற்றும் சந்திர கிரகங்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும் அது பித்ரு தோஷம் கொண்ட ஜாதக அமைப்பாகும். ராகுவுடன் சூரியனும் சனியும் சிம்மத்தில் சேர்ந்து இருந்தால் மூன்று தலைமுறைகளாக பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தமாகும்.

பித்ரு தோஷம் ஏன் ஏற்படுகிறது

பித்ரு தோஷம் ஏன் ஏற்படுகிறது?

நமது தாய் தந்தை வழி வாழ்ந்து இறந்து போன முன்னோர்கள் நமது பித்ருக்கள் ஆவர். ஒருவர் சென்ற பிறவியில் தாய் தந்தையை கவனிக்காமல் இருந்து, அதற்காக பெற்றோர்கள் சாபமிடுவதால் அவர்கள் அடுத்த பிறவியில் பித்ரு தோஷ ஜாதகத்துடன் பிறக்கிறார்கள். அதே போன்று உடன் பிறந்த சகோதர, சகோதரிகளை கொடுமை செய்தாலும் அவர்களும் மறுபிறவியில் பித்ரு தோஷத்தோடு பிறக்கிறார்கள். பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடையாததால் ஏற்படும் தோஷமே பித்ரு தோஷம் ஆகும். வயிற்றில் வளரும் கருவை கருச்சிதைவு செய்தாலும் பித்ரு தோஷம் உண்டாகும்.

பித்ரு தோஷம் என்ன செய்யும்?

பித்ரு தோஷம் உள்ளவருக்கு திருமணமே நடக்காது, அல்லது திருமணம் மிகவும் தாமதமாக நடைபெறும், அல்லது திருமணம் நடந்தாலும் விவாகரத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் கணவன் மனைவியிடையே விட்டு கொடுத்து போவது என்பது சிறிதும் இருக்காது, இருவருமிடையே வெறுப்பு அதிகரிக்கும். மேலும் குடும்ப வாழ்க்கை கசக்கும். பித்ருக்கள் நமக்கு கொடுக்கும் சாபத்தால் கடவுள் நமக்கு கொடுக்க நினைக்கும் கிடைக்கும் வரங்கள் அனைத்தையும் பித்ரு தேவதைகள் தடுக்கும்.

பித்ரு தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள்

பித்ரு தோஷம் உள்ளவர்கள் அதற்குண்டான பரிகாரங்கள் செய்யாமல் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டங்களை அனுபவிப்பார்கள். எத்தனை கோவில்களுக்கு சென்று வந்தாலும் பித்ருக்களுக்கு உரிய பரிகாரம் செய்யவிட்டால் பித்ரு தோஷம் நீங்காது.

ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் அனைத்து தோஷங்களையும் நீக்கும். மிகக்கடுமையான பித்ரு தோஷத்தால் அவதிபடுபவர்கள் புண்ணிய ஸ்தலமான இராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்ய வேண்டும்.
திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ரு தர்ப்பணமானது பன்னிரெண்டு ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்த பலனை கொடுக்கும்.

அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணியத்தை தரும். அமாவாசையும் அவிட்டம் நட்சத்திரத்திமும் சேர்ந்து வரும் காலங்களில் பித்ருக்களை நினைத்து அன்னதானம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.

பித்ரு வழிபாட்டில் கவனிக்க வேண்டியது

நம் முன்னோர்கள் இறந்த நேரம் மற்றும் திதிகளை குறித்து வைத்து அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டும் பித்ரு தர்ப்பணம் செய்வது நல்லது. பித்ருக்களுக்கு தர்ப்பணங்கள் செய்யும் போது காலை 7 மணிக்குள் செய்துவிட வேண்டும். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தின்போது தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் நதி கரைகளில் கொடுத்தால் அதற்கு அதிகப்படியான சக்தி உண்டு. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது ஒருவர் பல யாகங்களை செய்வதை விட மேலானது. ஒரு ஆண்டிற்கு ஒருவர் 96 முறை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும். அமாவாசை மற்றும் சூரிய சந்திர கிரகணங்களில் பித்ருகளுக்கு செய்யும் தர்ப்பணங்களுக்கு மிகுந்த பலன் உண்டு.

அமாவாசையன்று அன்னதானம் செய்வது மிகவும் நல்லது. பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாட்களில் வெங்காயம், பூண்டு மற்றும் வாசனை திரவியங்களை தவிர்க்க வேண்டும். ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணங்களுக்கு மிகவும் சக்தி உண்டு. இந்த நாளில் பித்ருக்களை சாந்தப்படுத்தினால் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழலாம். இந்த நாளில் தர்ப்பணம் கொடுக்க முன்னோர்களின் ஆசி முழுவதுமாக கிடைக்கும்.

பித்ரு பூஜை செய்ய உகந்த ஆலயங்கள்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான சிவபெருமான் ‘நாவாய் முகுந்தன்” என்று பெயர் கொண்டு அருள்பாலிக்கும் திருநாவாய் தலம் பித்ரு பூஜை செய்ய சிறந்த தலமாக கருதப்படுகிறது. இத்தலத்தின் விருட்சத்தின் அடியில் பித்ருக்களுக்கு அமாவாசையன்று அன்னம் வைத்து வழிபடுகின்றனர். இங்கு பித்ரு பூஜை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

பித்ரு சாபம் நீக்கும் மந்திரம்

காலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர துணியுடன் நின்று கீழ்காணும் மந்திரத்தை சொல்லி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி மந்திரம் கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்.

ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்! சஹசிவ சூரியாய!
வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா

பித்ரு தோஷம் உடையவர்கள் இதனை ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசையன்று தொடங்க வேண்டும். பின் முடிந்தவரை செய்து வர பாவங்கள் அனைத்தும் தீரும். தடைகள் அகன்று சுப காரியங்கள் நடக்கும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version